கால்பந்து உலகக்கோப்பை தொடரின் 22ஆவது சீசன் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் அடுத்த சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஈகுவடார் - செனகல் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியின் தொடக்கம் முதல் செனகல் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது . ஆட்டத்தின் 44ஆவது நிமிடத்தில் செனகல் அணியின் இஸ்மைலா சர் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
இதனால் முதல் பாதியில் செனகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் மொய்சஸ் கைசெடொ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.
இதற்கு பதிலடியாக செனகல் அணியின் கலிடோ கவுலிபலி 70ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன்பின் ஈகுவடார் அணி இறுதி வரை போராடியும் அந்த அணியால் கோல் அடிக்க முடிவ்யவில்லை.
இறுதியில், செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்தது. இந்த தோல்வியின் மூலம் ஈகுவடார் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.