ஸ்பெயின் நாட்டின் வாலன்சியா நகரில் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் தொடங்கி நடந்து வருகின்றன. இதில், உலக தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் 14ஆவது இடத்தில் இருக்கும் சிலி அணிகள் விளையாடின.
போட்டியின் தொடக்கத்திலேயே இந்திய அணி அதிரடியாக விளையாடியது. இந்திய அணியின் வீராங்கனை சங்கீதா குமாரி 2ஆவது நிமிடத்திலும், சோனிகா 10ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அணி முன்னிலை பெற வழிவகுத்தனர்.
இதனையடுத்து, கோல் அடிப்பதற்கு சிலி அணி போராடியது. ஆனால், அதற்கான சரியான சந்தர்ப்பங்களை அந்த அணி பயன்படுத்தி கொள்ளவில்லை. போட்டியின் முதல் பாதியில், பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இரு அணிகளும் வீணடித்தன.
இதனால், போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது. இதன்பின்னர், போட்டியின் 31ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் நவ்னீத் கவுர் அடித்த கோலால் இந்தியா 3-0 என தொடர்ந்து முன்னிலையில் நீடித்தது.
இதன்பின்பு, சிலி அணியின் வில்லாகிரான் ஒரு கோல் அடித்தபோது, 3-1 என நிலைமை இருந்தது. ஆனாலும் அந்த அணியால் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி முடிவில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் சிலியை வீழ்த்தி வெற்றி பெற்றது.