பிரஞ்சு ஓபன் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி தைவானின் சிஒய் லூ மற்றும் பிஎச் யங் இணையை எதிர்கொள்கிறது.
அதன்படி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியின் தொடக்கம் முதலே இந்திய இணை எதிரணிக்கு வாய்ப்புக் கொடுக்காமல் அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற்று அசத்தியது.
அதன் பயனாக முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் இந்திய இணை கைப்பற்ற, அடுத்த செட்டில் தைவானிய இணை போட்டி போட்டு புள்ளிகளைப் பெற ஆரம்பித்தது.
ஆனாலும் சூதாரித்து விளையாடிய இந்திய இணை அந்த செட்டையும் 21-19 என்ற காணக்கில் போராடி கைப்பற்றி தைவானிய இணைக்கு அதிர்ச்சியளித்தது.
இதன்மூலம் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 21-19 என்ற புள்ளிகணக்கில் தைவானின் சிஒய் லூ மற்றும் பிஎச் யங் இணையை வீழ்த்தி பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
மேலும் பிரஞ்சு ஓப்பர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற சாதனையையும் இந்த இணை பெற்றுள்ளது. அதேசமயம் இந்த ஆண்டில் இந்த இருவரும் வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டமாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.