செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை 9 சுற்றுகளாக நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை 7 தொடர்கள் முடிந்துள்ள நிலையில், 8ஆவது தொடர் கடந்த 14ஆம் தேதி முதல் 21 வரை நடக்கிறது.
இந்த தொடரில் 5 முறை உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர். 16 வயதான தமிழக வீரர் குகேஷ் உட்பட இந்தியா சார்பில் 5 வீரர்கள் ஆடுகின்றனர். இந்திய வீரர்கள் வழக்கம்போலவே செஸ் போட்டியில் அபாரமாக விளையாடிவருகின்றனர்.
குறிப்பாக 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை அசால்ட்டாக வீழ்த்திவருகின்றனர். அதிலும் தமிழக வீரர்களிடம் அவர் தோல்விகளை தழுவிவருகிறார். இந்த தொடரில் கடந்த சனிக்கிழமை இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியிடம் கார்ல்சன் தோல்வியடைந்தார்.
இந்த ஆண்டில் இதுவரை தமிழக வீரர் பிரக்ஞானந்தா மாக்னஸ் கார்ல்சனை 3 முறை வீழ்த்தியிருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் மாக்னஸ் கார்ல்சனை 26ஆவது நகர்த்தலில் வீழ்த்தினார் தமிழகத்தை சேர்ந்த 16 வயதான இளம் வீரர் குகேஷ். இவர் செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் அபாரமாக ஆடியது குறிப்பிடத்தக்கது.
உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதற்கு முன் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி ஆகிய நால்வரும் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியிருக்கின்றனர்.