17 வயதுக்கு உட்பட்டவருக்கான ஃபிஃபா ஜூனியர் மகளி உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.
நேற்று தொடங்கிவுள்ள இந்த கால்பந்து தொடர் வரும் 30ஆம் தேதி வரை புவனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படவுள்ளது. மேலும் இந்த கால்பந்து தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில் தொடக்க நாளான நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் கால்பந்து அணி பலம் வாய்ந்த அமெரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதல் தீவிரம் காட்டிய அமெரிக்க வீராங்கனைகள் இந்திய அணியின் டிஃபென்ஸைத் தகர்த்து அடுத்தடுத்து கோல் அடித்தனர். அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மெலினா ரெபிம்பாஸ் பிரே 2 கோல்களை அடித்தார்.
பதிலுக்கு கோல் போடுவதற்கு இந்திய வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. தொடர்ந்து போராடிய இந்திய அணியால் இறுதிவரை கோல்கூட அடிக்க முடிவில்லை.
இதன்மூலம் அமெரிக்க ஜூனியர் கால்பந்து அணி ஆட்டநேர முடிவில் 8-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஜூனிய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்திய ஜூனியர் மகளிர் அணி நாளை மறுநாள் (அக்.14) மொராக்கோ ஜூனியர் அணியுடன் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.