ஸ்பெயின் நாட்டின் வாலன்சியா நகரில் 2022ஆம் ஆண்டுக்கான மகளிர் நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில், உலக தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடின.
போட்டியின் தொடக்கத்திலேயே இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் விளைவாக இந்திய அணி வீராங்கனை கிரேஸ் எக்கா ஆட்டத்தின் 14ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார்.
இதனையடுத்து, கோல் அடிப்பதற்கு தென் ஆப்பிரிக்க அணி போராடியது. ஆனால், அதற்கான சரியான சந்தர்ப்பங்களை அந்த அணி பயன்படுத்தி கொள்ளவில்லை. அதன்பின் ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் குர்ஜித் கவுர் கோலடிக்க இந்திய அணி 2 கோல்களுடன் முன்னிலைப் பெற்றது.
ஆனால் கடைசி வரை போராடிய தென் ஆப்பிரிக்க அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதன்மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறியது. இந்த அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.