10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனின் சலாலா நகரில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதற்கு முன்னர் 3 முறை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியுள்ளன.
அதில், 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானும், 2004 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுன் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்நிலையில், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இறுதிப்போட்டியில் களம்கண்ட இரு அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்ல தீவிரம் காட்டின.
அனல் பறந்த இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி அணி தரப்பில் ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் அங்கத் பீர் சிங் கோலடிக்க, ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் அரிஜித் சிங் ஹண்டல் கோலடித்து அசத்தினார். அதேசமயமம் பாகிஸ்தான் அணி ஒரு கோலை மட்டுமே அடிக்க மற்ற அனைத்து முயற்சிகளையும் கோல்கீப்பர் சசிகுமார் மோஹித் ஹொன்னஹள்ளியின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நான்காவது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து ஜூனியர் ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரை வென்ற இந்திய அணிக்கு, ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.