கா்நாடக மாநிலம், பெங்களூருவில் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற மகளிா் போல்வால்ட் பிரிவில் தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ் (25) 4.21 மீ உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றாா்.
கடந்த 15 நாள்களில் இரண்டாவது முறையாக புதிய சாதனை படைத்துள்ளாா் ரோஸி. ஏற்கெனவே காந்தி நகரில் நடைபெற்ற 36ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் 4.20 மீ உயரம் தாண்டி தங்கம் வென்று தேசிய சாதனை படைத்தாா். தற்போது அவரது சாதனையே அவரே முறியடித்துள்ளாா்.
மகளிர் 1500 மீ., ஓட்டம் நடந்தது. இதன் முதல் தகுதிச்சுற்றில் தமிழகத்தின் கவிதா, 4 நிமிடம், 33.20 வினாடியில் ஐந்தாவது இடம் பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு வீராங்கனை நீலாம்பரி 4 நிமிடம் 44.79 வினாடியில் ஓடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில், அரையிறுதியில் தமிழகத்தின் அர்ச்சனா, 11.65 வினாடியில் வந்து மூன்றாவது இடம் பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சுபா வெங்கடேசன், மூன்றாவது தகுதிச்சுற்றில் களமிறங்கினார். இதில் 53.00 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு தமிழக வீராங்கனை ஒலிம்பா ஸ்டெபி (55.03 வினாடி) தகுதிச்சுற்றில் மூன்றாவது இடம் பெற்றார்.
ஆண்கள் 400 மீ., ஓட்ட தகுதிச்சுற்றில் தமிழக வீரர் அவினாஷ் (47.40 வினாடி) நான்காவது இடம் பிடித்து ஏமாற்றினார். பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் தமிழகத்தின் நந்தினி, 43.68 மீ., துாரம் மட்டும் எறிந்து 9ஆவது இடம் பெற்றார்.
மகளிா் 20 கி.மீ நடை ஓட்டத்தில் ரவீணா (ரயில்வே) புதிய சாதனையுடன் தங்கம் வென்றாா். மஸ்கட்டில் நடைபெற்ற உலக தடகள நடை ஓட்டப் போட்டியில் பதக்கம் வென்றவா் ரவீணா. வந்தனா (கா்நாடகம்), முனிதா (உத்திர பிரதேசம்) வெள்ளி, வெண்கலம் வென்றனா்.