புரோ கபடி 9ஆவது சீசன் லீக் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவார விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. புரோ கபடி தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் – பாட்னா பைரட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு புள்ளிகளைப்பெற முயற்சி செய்தனர். அதிலும் தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் ஹிமான்ஷு, நரேந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தனர்.
அதற்கேற்றார் போல் பாட்னா பைரட்ஸ் அணியில் ரோஹித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதனால் இரு அணிகளுக்கும் இடையே மோதல் அனல் பறந்தது.
இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 33-32 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் ஹிமான்ஷு 11 புள்ளிகளையும், நரேந்தர் 9 புள்ளிகளையும் பெற்று அணியின் வெற்றிக்கு உதவினர்.