ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் வரும் ஜனவரி 13ஆஅம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இதில் நட்சத்திர வீரர்கள் ரஃபேல் நடால், நோவாக் ஜோகோவிச், டோமினிக் தீம் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்த தொடருக்கான பரிசுத் தொகையை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கூட்டமைப்பின் அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர்.
அதன்படி, கடந்த ஆண்டைவிட 3.4 சதவீதம் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடரின் மொத்த பரிசுத் தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.426.27 கோடியாகும்.
இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர் தலா ரூ.16.56 கோடியை பரிசாக பெறுவார்கள். தகுதி சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு ரூ.14.49 லட்சம் கிடைக்கும்.
அதேவளையில் மெயின் டிராவில் முதல் சுற்றுடன் வெளியேறுபவர்களுக்கு சுமார் ரூ.59 லட்சம் கிடைக்கும். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் பரிசுத் தொகை 321 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.