கத்தாரில் 22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று 3 லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதின. அல் துமாமா மைதானத்தில் நடந்த குரூப் ஏ மோதலில் செனகலை எதிர்த்து 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணிகளும் மாறி மாறி அட்டாக்கிங் மற்றும் டிஃபென்ஸில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த இரு அணிகளும் கோலடிக்க திணறினர்.இந்த நிலையில் 41 ஆவது நிமிடத்தில் செனகல் அணிக்கு கிடைத்த கோல் அடிக்கும் வாய்ப்பை நெதர்லாந்து அணியின் முக்கிய வீரரான வின்சென்ட் ஜான்சன் தடுத்து நிறுத்தினார்.
இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் எதுவும் அடிக்கப்படாமலேயே முடிவுக்கு வந்தது. பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதி தொடக்கம் முதலே யார் முதல் கோலை அடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கு ஏற்ப ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை நெதர்லாந்து அணியின் வான் டிஜிக் சரியான நேரத்தில் ஹெட்டர் அடிக்க அது கோலாக மாறியது. அதன்பின் 90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில், 8 நிமிடங்கள் கூடுதலாக நேரம் வழங்கப்பட்டது. அதில் செனகல் அணியின் வீரர்கள் கோல் அடிக்க ஆக்ரோஷமான முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் செனகல் அணியின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. பின் கடைசி நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டேவி கிளாஸன் அந்த அணிக்காக 2 ஆவது கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி வெற்றியுடன் இத்தொடரை தொடங்கியுள்ளது.