இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 9ஆவது சீசன் நாடுமுழுவதும் உள்ள பெரும் நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த தொடரில் 11 அணிகள் பங்கேற்கிறது.
இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி, ஈஸ்ட் பெங்கால் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தின் 7ஆவது நிமிடத்திலேயே கோவா கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் அல்வாரோ வாஸ்கெஸ் பாஸ் செய்த பந்தை லாவகமாக கடத்திச் சென்று கோலடித்தாா் அந்த பிராண்டன் ஃபொ்னாண்டஸ்.
இவ்வாறாக முதல் பாதி ஆட்டத்தில் கோவா முன்னிலை பெற்றிருக்க, 2ஆவது பாதியில் பெங்கால் அணிக்காக கிளெய்டன் 64ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.
அதன்பின் ஆட்டம் டிராவை நோக்கி சென்று கொண்டிருக்க, கடைசியாக 90ஆவது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கோவா வீரா் எட்வாா்டோ பெடியா பெலேஸ் அருமையாக கோலடித்து, அணியை வெற்றி பெறச் செய்தாா்.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் எஃப்சி கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் நடப்பு சீசனில் கோவா அணி தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அதேசமயம் ஈஸ்ட் பெங்கால் அணி நடப்பு சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. மேலும் புள்ளிப்பட்டியளில் 3 புள்ளிகளுடன் கோவா அணி 4ஆம் இடத்திலும், ஈஸ்ட் பெங்கால் அணி புள்ளிகள் ஏதுமின்றி கடைசி இடத்திலும் நீடிக்கின்றன.