இந்தியாவின் கால்பந்து லீக் தொடரான ஐஎஸ்எல் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி கோவா எஃப்சி அணியை எதிர்கொண்டார்.
இப்போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் கோலடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் மும்பை அணியின் ஜோர்ஜ் முதல் கோலை அடிக்க, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கோவா அணியின் இகார் 22ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணிக்கு ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் லல்லியன்சுவாலா சாங்டே கோலடித்து அணியை முன்னிலைப் படுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக விளையாடிய மும்பை அணிக்கு ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் ஜோர்ஜ் மீண்டுமொரு கோலடிக்க, 55ஆவது நிமிடத்தில் ஆல்பர்டோ நோகுவேரா கோலடித்து அணியின் வெற்றியை ஏறத்தாழ உறுதிசெய்தார்.
ஆனால் மறுமுனையில் கோவா அணி கோலடிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் மும்பை அணியின் தடுப்பாட்ட காரர்கள் முறியடித்தனர். இதனால் ஆட்டநேர முடிவில் மும்பை சிட்டி எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் கோவா எஃப்சி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.