கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி சாதனைப் படைத்த மார்னஸ் லபுஷாக்னே!

Updated: Fri, Sep 08 2023 14:00 IST
கன்கஷன் சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கி சாதனைப் படைத்த மார்னஸ் லபுஷாக்னே! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலியா அடுத்ததாக 2023 உலகக்கோப்பை தயாராகும் வகையில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதில் நெற்று ப்ளூம்ஃபோன்டைன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா கடுமையாக போராடி 49 ஓவரில் 222 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. சொல்லப்போனால் குயிண்டன் டீ காக் 11, வேன்டெர் டுஷன், ஐடன் மார்க்ரம் 19, ஹென்றிச் கிளாசென் 14, டேவிட் மில்லர் 0 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 200 ரன்களை கூட தாண்டது என்று கருதப்பட்ட தென் ஆப்பிரிக்காவை மறுபுறம் நங்கூரமாக நின்று தனி ஒருவனாக காப்பாற்றிய கேப்டன் பவுமா சதமடித்து 14 பவுண்டரி 1 சிக்ஸருடன் 114 (142) ரன்கள் குவித்து அசத்தினார்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 223 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 0, டிராவிஸ் ஹெட் 33, கேப்டன் மிட்சேல் மார்ஷ் 17, ஜோஸ் இங்லிஷ் 1, அலெக்ஸ் கேரி 3, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் தென்னாபிரிக்காவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

போதாகுறைக்கு கேமரூன் க்ரீன் தலையில் அடி வாங்கி காயமடைந்து 0 ரன்களில் வெளியேறியதால் 93/6 என சரிந்த இந்த ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக்குறியானது. இருப்பினும் அப்போது காயமடைந்த கேமரூன் கிரீனுக்கு பதிலாக சப்ஸ்டியூட் வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற மார்னஸ் லபுஷாக்னே நங்கூரமாக நின்று தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு சவாலை கொடுத்தார். அந்த சமயத்தில் எதிர்புறம் சீன் அபேட் 9 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தம்முடைய முழு திறமையை வெளிப்படுத்திய அவர் வெற்றிக்காக முழு மூச்சுடன் போராடினார்.

அதற்கு அடுத்ததாக வந்த ஆஷ்டன் அகர் தம்முடைய பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் குவித்து கை கொடுத்தார். அதை பயன்படுத்திய லபுஷாக்னே கடைசி வரை அவுட்டாகாமல் 8ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 80 ரன்கள் விளாசி 40.2 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான வெற்றியை பெற்று கொடுத்தார். அதனால் தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் ஜெரால்டு கோட்ஸி தலா 2 விக்கெட்டுகள் எடுத்து போராடிய போராட்டம் வீணானது.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியா முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 2011ஆம் ஆண்டு டர்பன் நகரில் மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய வெற்றியாகும்.

அப்படிப்பட்ட மகத்தான வெற்றியை பெற்றுக்கொடுத்து தம்மை 2023 உலகக்கோப்பையில் தேர்வு செய்யாமல் தவறு செய்து விட்டீர்கள் என்று ஆஸ்திரேலிய வாரியம் யோசிக்க வைக்கும் அளவுக்கு அசத்திய லபுஷாக்னே ஒருநாள் கிரிக்கெட்டில் சப்ஸ்டியூட் வீரராக வந்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற தம்முடைய சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

1. மார்னஸ் லபுஷாக்னே : 80*, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2023*
2. மார்னஸ் லபுஷாக்னே : 59, இங்கிலாந்துக்கு எதிராக, 2019
3. முகமது ரிஸ்வான் : 50* இலங்கைக்கு எதிராக, 2023

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை