ஆசிய கோப்பை 2022: தொடருக்கான தேதி வெளியீடு!

Updated: Sat, Mar 19 2022 17:43 IST
Asia Cup 2022 to begin from August 27 (Image Source: Google)

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தொடர், கரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்தாண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு இலங்கை தான் தொடரை நடத்தும் உரிமையை பெற்றிருந்தது. தள்ளிப்போன போதும், மீண்டும் இலங்கை தான் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான உரிமையை பெற்றிருந்த பாகிஸ்தான் அடுத்தாண்டு ஆசியக்கோப்பையை தொகுத்து வழங்கவுள்ளது. இந்த போட்டிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிசிசிஐ தரப்பில் கங்குலி, ஜெய் ஷா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இறுதியில் ஆசியக்கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வழக்கமாக ஆசியக்கோப்பை 50 ஓவர் அல்லது டி20 என எந்த வடிவில் வேண்டுமானாலும் நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு டி20 வடிவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் நேரடியாக லீக் சுற்றுக்கு தேர்வாகியுள்ளன. அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய 4 நாடுகளுக்கு இடையே தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடத்தப்பட்டு, ஒரு அணி மட்டும் லீக் சுற்றுக்கு முன்னேறும்.

இதுவரை நடந்துள்ள 14 சீசன்களில் இந்திய அணி தான் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்திய அணி 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இலங்கை அணி 5 முறை கோப்பையை வென்றுள்ளது. மீதமுள்ள 2 சீசன்களிலும் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை