ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மெக்கேவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் ஷஃபாலி 22 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மந்தனா அரைசதம் அடித்தார். பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மந்தனாவும் 86 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ரிச்சா கோஷ் 44 ரன்களை எடுத்து உதவினார்.
இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் தஹிலா மெக்ராத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் அலிசா ஹீலி, மெக் லெனிங், எல்லிஸ் பெர்ரி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பிம் ஜோடி சேர்ந்த பெத் மூனி - தஹிலா மெக்ராத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது.
இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 74 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த பெத் மூனி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதனால் போட்டியின் கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 13 ரன்கள் தேவைப்பட்டது. அதிலும் ஓவரின் கடைசி பந்தில் பெத் மூனி ஆட்டமிழக்க, வெற்றி இந்திய அணிக்கு கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அது நோபாலாக மாறா, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், பெத் மூனி லாங் ஆன் திசையில் அடித்து இரண்டு ரன்களை தேடித்தந்தார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 26ஆவது வெற்றியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.