சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டராக பாபர் ஆஸம் உள்ளார் - விராட் கோலி!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி இன்று முதல் நடைபெறுகிறது. செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் நாளை (ஆகஸ்ட் 28) இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
100ஆவது சர்வதேச டி20 ஆட்டத்தில் நாளை விளையாடுகிறார் விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிராக. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றியை எந்தளவுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்களோ அதேபோல கோலியின் பேட்டிங்கையும் காண ஆவலாக உள்ளார்கள். சிறிது கால ஓய்வுக்குப் பிறகு விளையாடுவதால் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் கோலி எவ்வளவு ரன்கள் எடுக்கப் போகிறார் என்கிற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விராட் கோலி அளித்துள்ள பேட்டியில், “கடந்த 2019 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸமிடம் முதல்முறையாகப் பேசினேன். இருவரும் அமர்ந்து பல விஷயங்களைப் பேசினோம். என் மீது அவருக்கு ஏராளமான மரியாதை உண்டு.
சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடி பெயர் எடுத்த பிறகும் அவருக்கு என் மீதான மரியாதை குறையவே இல்லை. மிகவும் இயல்பாகப் பழகக்கூடியவர். தற்போது, சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்டராக பாபர் ஆஸம் உள்ளார்” என தெரிவித்துள்ளார்.