சிஎஸ்கே தொடர்பான பதிவை நீக்கிய ஜடேஜா; கருத்து தெரிவித்த சிஎஸ்கே நிர்வாகி!

Updated: Sat, Jul 09 2022 22:38 IST
Image Source: Google

ஐபிஎல்லில் 2012ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா. இடையில் 2016-2017 ஆகிய இரண்டு ஆண்டுகளும் சிஎஸ்கே அணி தடையால் ஐபிஎல்லில் ஆடவில்லை. அந்த 2 சீசன்களை தவிர, 2012லிருந்து தொடர்ச்சியாக சிஎஸ்கே அணியில் ஆடிவருகிறார் ஜடேஜா. சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவராகவும், கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரராகவும் திகழ்ந்தவர் ஜடேஜா.

2022 ஐபிஎல்லுக்கு முன் தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. ஜடேஜா பெயரளவில் கேப்டனாக இருந்தாலும், தோனியே களத்தில் ஆதிக்கம் செலுத்தினார். தோனி தான் பெரும்பாலான முடிவுகளை எடுத்தார். ஆனால் தோல்விக்கு பின், அந்த தோல்வியை மட்டும் ஜடேஜா சுமக்க நேர்ந்தது.

ஒருகட்டத்தில் சுதந்திரமாக தன்னால் கேப்டனாக செயல்பட முடியவில்லை என்ற விரக்தியில், பாதி சீசனிலேயே கேப்டன்சியிலிருந்து விலகிய ஜடேஜா, காயம் காரணமாக அந்த சீசனில் முழுமையாக விளையாடமால் வெளியேறினார். 2022 ஐபிஎல்லில் 116 ரன்கள் மட்டுமே அடித்த ஜடேஜா, 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

ஜடேஜாவிற்கும் சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் இடையே விரிசல் விழுந்துவிட்டது என்பது அப்பட்டமாக தென்பட்டது. கடந்த 7ஆம் தேதி தோனியின் பிறந்தநாளன்று கூட, ஜடேஜா அவருக்கு வாழ்த்து கூறவில்லை.

இந்நிலையில், சிஎஸ்கே தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவுகள் அனைத்தையும் ஜடேஜா திடீரென மொத்தமாக டெலிட் செய்துவிட்டார். ஜடேஜாவின் இந்த செயல், சிஎஸ்கேவுடனான மோதலையும், அவர் அடுத்த சீசனில் கண்டிப்பாக சிஎஸ்கே அணியில் ஆடமாட்டார் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டதாகவே தோன்றுகிறது.

இந்நிலையில், ஜடேஜா பதிவுகளை நீக்கியது குறித்து விளக்கமளித்துள்ள சிஎஸ்கே அணி நிர்வாகி ஒருவர், இது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதுகுறித்து எங்கள் அணிக்கு எதுவும் தெரியாது. எல்லாம் ஓகே. எதுவுமே தவறில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை