ஐபிஎல் 2021: சிஎஸ்கே அணிக்கு புது சிக்கல்; இரு வீரர்கள் பங்கேற்பது சந்தேகம்!

Updated: Wed, Sep 15 2021 12:42 IST
CSK Playing XI vs MI: Sam Curran unavailable, Faf du Plessis doubtful (Image Source: Google)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள், வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிஎஸ்கே அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அணியின் முக்கிய வீரர்கள் இருவர் முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூ பிளெசிஸ் தற்போது கரீபியன் லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டூப்பிளசிஸுக்கு சமீபத்தில் தலையில் பந்துபட்டு ஏற்பட்ட காயத்தால் கன்கஸனில் வெளியேறினார். இதனால் கடந்த இரு போட்டிகளாக அவர் பங்கேற்கவில்லை. கரிபீயன் லீக்கில் அருமையான ஃபார்மில் இருந்து வரும் டூபிளெசிஸ் 3ஆவது அதிகபட்ச ஸ்கோரை எடுத்த வீரராக இருந்து வருகிறார்.

டூ பிளெசிஸுக்கு உடல்நிலை விரைவாக குணமடைந்துவிடும் பட்சத்தில் சிஎஸ்கே அணியில் இணைந்து உடனடியாக போட்டியில் பங்கேற்பாரா எனத் தெரியவில்லை. ஆதலால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் அடுத்த சில ஆட்டங்களில் டூ பிளெசிஸ் பங்கேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.

டூ பிளெசிஸ் உடல்நிலை குறித்து சிஎஸ்கே அணி வட்டாரங்கள் கூறுகையில் “ டூ பிளெசிஸ் உடல்நிலை குறித்து ஏதும் தெரியாது. அவர் துபாய் வந்தபின் உடல்நிலையை அணி மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அவர் உடற்தகுதியை ஆய்வு செய்தபின் அணியில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான சாம் கரனும் முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம் கரன் இன்னும் துபாய்க்கு வந்து சேரவில்லை. அவர் இனிவரும் நாட்களில் வந்து சேர்ந்தாலும், 6 நாட்கள் தனிமைக் காலத்தை முடித்துதான் அணியில் சேர முடியும். அவ்வாறு சேரும்பட்சத்தில் முதல் சில போட்டிகளில் சாம் கரன் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதற்கிடையே கரிபீயன் லீக்கில் விளையாடிவரும் சிஎஸ்கே வீரர்கள் டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர்,டூ பிளசிஸ் ஆகிய மூவரும் நாளை துபாய் வந்து சேர்வார்கள் என சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூவரும் பயோபபுள் டிரான்ஸ்பர் முறையில் வருவதால் 6 நாட்கள் கட்டாயத் தனிமைத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை