ஜடேஜாவை அன்ஃபாலோ செய்த சிஎஸ்கே!

Updated: Thu, May 12 2022 14:44 IST
Image Source: Google

நடப்பு ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியின் கேப்டன் பொறுப்பு ஜடேஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கேப்டன் பொறுப்பு வகித்த ஜடேஜா முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுத் தந்தார். அவரது ஃபார்மும் கேள்விக்குள்ளானது. இந்த சீசனில் 10 போட்டியில் விளையாடியுள்ள ஜடேஜா, 116 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். சராசரி 19 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 118 ஆகும். 

ஜடேஜா நடப்பு சீசனில் அதிகபட்சமாக 26 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதே போன்று பந்துவீச்சிலும் ஜடேஜா 10 போட்டியில் விளையாடி 5 விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார். இதையடுத்து, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். அப்போது பேசிய தோனி, ஜடேஜாவுக்கு கேப்டன்ஷிப் அழுத்தத்தை கையாள முடியவில்லை என்று கூறினார்.

இதனிடையே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதையடுத்து நடப்பு தொடர் முழுவதிலும் ஜடேஜா விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே நிர்வாகம்  அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜடேஜாவுக்கு கேப்டன்சி சுதந்திரம் கொடுக்காமல், பதவியை பறித்துக்கொண்டதால் அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை சிஎஸ்கே நிறுத்திவிட்டதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், “சமூக ஊடகங்கள், நான் எதையும் பின்பற்றுவதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்குத் தெரியாது. நிர்வாகத் தரப்பில் இருந்து நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது என்னவென்றால், எந்த பிரச்சனையும் இல்லை, சமூக ஊடகங்களில் என்ன இருந்தாலும், எனக்குத் தெரியாது. ஜடேஜா சிஎஸ்கேவின் எதிர்காலத்திற்கான விஷயங்களில் எப்போதும் உறுதியாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை