வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் சூப்பரான பினிசிங் கொடுத்து காப்பாற்றினார்.

Advertisement

கடந்த 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அறிமுகமான இவரது இளமை கால கட்டத்தில் அதே வருடம் அறிமுகமாகி அதிரடியாக பேட்டிங் செய்து கேப்டனாக 3 உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்த காரணத்தால் தொடர்ச்சியான வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்காமலேயே காலங்கள் உருண்டோடியது. கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடிய அவரை அத்தோடு அணி நிர்வாகமும் மொத்தமாக கழற்றி விட்டாலும் மனம் தளராத அவர் ஐபிஎல் தொடரிலும் தமிழகத்துக்கு உள்ளூர் கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார்.

Advertisement

இருப்பினும் அவரை இந்திய அணி நிர்வாகம் கண்டு கொள்ளாததால் கடந்த 2021இல் இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக அவதரித்தார். மேலும் 35 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் அவரது இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தனர். ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் இன்னும் நம்மால் சாதிக்க முடியும் என்று உணர்ந்த அவர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்துடன் கடினமாக உழைத்து பயிற்சிகளை எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக 183.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் கடைசி நேரத்தில் களமிறங்கி எதிரணிகளை வெளுத்து வாங்கி சிறந்த பினிஷராக செயல்பட்டார்.

இதன்மூலம் 3 வருடங்கள் கழித்து தாமாக தேடிவந்த வாய்ப்பில் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் அசத்திய அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அசத்துவதால் டி20 உலக கோப்பையில் விளையாட வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. மொத்தத்தில் தோனிக்கு முன்பாக அறிமுகமாகி தோனி எனும் மகத்தான வீரரின் மிகப்பெரிய கேரியரையும் தாண்டி அவர் ஓய்வு பெற்ற பின்பும் 37 வயதில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள், அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் போன்ற அவரால் படைக்க முடியாத சாதனையை படைத்து வரும் தினேஷ் கார்த்திக் அவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்று நிரூபித்து வருகிறார்.

அதிலும் கடந்த 2006இல் வரலாற்றில் முதல் முறையாக ஜொகனஸ்பர்க் நகரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய முதல் டி20 போட்டியில் அறிமுகமான வீரர்களில் தினேஷ் கார்த்திக் மட்டும்தான் இன்னும் விளையாடி வருகிறார். இந்நிலையில் தோனியை தாண்டி பெரும்பாலான வீரர்கள் ஓய்வு பெறும் வயதில் அட்டகாசமாக விளையாடுவது உண்மையாகவே மிகப் பெரிய விஷயம் என்று முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அஜய் ஜடேஜா, “இதில் சுவாரசியம் என்னவென்றால் எம்எஸ் தோனிக்கு முன்பே அறிமுகமான தினேஷ் கார்த்திக் இத்தனை வருடங்கள் கழித்தும் விளையாடுகிறார். அவரின் விடாமுயற்சி என்னை மிகவும் ஈர்க்கிறது. இந்த வயதில் பலர் கிரிக்கெட்டை விட்டு வெளியேறுவார்கள். ஆனால் “நம்மால் சிறப்பாக என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து அதற்காக கடினமாக உழைத்த அவர் கடைசி 4 ஓவர்களில் சிறப்பாக செயல்படுகிறார்.

Advertisement

தற்போதைய இந்திய அணியில் ஒவ்வொரு இடத்திற்கும் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். சூரியகுமார், ரோகித், விராட், பாண்டியா, பண்ட் போன்றவர்கள் இருந்தபோதிலும் கடைசி 4 ஓவர்களுக்காக தேர்வுக்குழுவினர் தினேஷ் கார்த்திக்கை வைத்துள்ளார்கள். இப்படி யோசித்த அதற்காக இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு பாராட்டுக்கள்.

ஆனால் ஒவ்வொரு வீரருக்கும் தனித்தனியான வேலையை கொடுக்காதீர்கள். ஏனெனில் போட்டி எப்போதும் உங்களது அணிக்கேற்ப நகராது. இருப்பினும் கார்த்திக் மீதும் அவரது விளையாட்டின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. 37 வயதில் வர்ணனை செய்வது அவருக்கு எளிதானது. ஆனால் அதற்கு பதிலாக அவர் தனது ஆர்வத்தை பின்பற்ற தேர்ந்தெடுத்துள்ளது பாராட்டத்தக்கதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News