இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஈயன் மோர்கன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியாது. பின்னர் ஜோடி சேர்ந்த தனஞ்செய டி சில்வா - ஷானகா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தனஞ்செய டி சில்வா 91 ரன்களையும், ஷானகா 47 ரன்களையும் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணி சார்பில் சாம் கரண் 5 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சர்வதேச ஒருநாள் போட்டியில் சாம் கரண் எடுத்த முதல் ஐந்து வீக்கெட் இதுவாகும்.
இதையடுத்து, 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் - ஜேசன் ராய் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் பேர்ஸ்டோவ் 29 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராய் அரைசதம் கடந்த கையோடு வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய ஜோ ரூட்டுடன், கேப்டன் மார்கன் ஜோடி சேர்ந்து, இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் அரை சதம் கடந்தும் அசத்தினர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 43 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் 68 ரன்னுடனும், மார்கன் 75 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் இலாங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சாம் கரண் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.