பென் ஸ்டோக்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? புதிய சர்ச்சையில் இங்கிலாந்து அணி!

Updated: Mon, Jul 18 2022 20:56 IST
England's Flamboyant All-Rounder Ben Stokes Announces Retirement From ODI Cricket (Image Source: Google)

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வினை அறிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில்தான் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். அதற்குமுன் இங்கிலாந்து டெஸ்ட் அணி, கத்துக்குட்டி அணியைப் போல படுமோசமாக சொதப்பி வந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் கேப்டன்ஸியில் மிரட்டலாக விளையாடி, எவ்வளவு பெரிய இலக்கையும் அசால்ட்டாக துரத்தி வெற்றியைப் பெற்றது.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற பென் ஸ்டோக்ஸ், சிறப்பாக செயல்படவில்லை. பட்லர் தலைமையில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் படுமோசமாக சொதப்பினார். இந்நிலையில்தான், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீரென்று அறிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தப் பிறகு இதற்கான காரணத்தையும் விளக்கினார். அதில், ‘‘இது மிகவும் கடினமான முடிவுதான். என்னால் இந்த வடிவ கிரிக்கெட்டில் 100% பங்களிப்பை வழங்க முடியவில்லை. இதற்குமேலும் கொடுக்க முடியாது என நினைக்கிறேன். இதுதான் ஓய்வுக்கு முக்கிய காரணம்’’ எனக் கூறியுள்ளார்.

இந்த வார்த்தைகளின் உள் அர்த்தங்கள் நிர்வாகத்தின் மீது இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதாவது, பென் ஸ்டோக்ஸுக்கு பந்துவீச சரிவர வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை என்றுதான் அவர் கருதுவதாக தெரிகிறது.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்கூட 3 போட்டிகளில் 3 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் 10 ஓவர்களை வீச தகுதியானவர். பவுன்சர்களையும் சிறப்பாக வீசுவார். இருப்பினும், அவர் தற்காலிக ஓய்வுக்கு சென்று வந்தப் பிறகு ஒருநாள் தொடர்களில் அதிக ஓவர்கள் கொடுக்கப்படுவதில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

பென் ஸ்டோக்ஸ் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். மேலும் 3 வடிவ கிரிக்கெட்டிலும் தலைசிறந்த ஆல்-ரவுண்டர். ஐபிஎல், இங்கிலாந்தது டி20 பிளாஸ்ட் போன்ற தொடர்களிலும் பங்கேற்கிறார். இதனால், ஓய்வு அரிதாகத்தான் கிடைக்கும். இதனையும் ஓய்வுக்கான காரணமாக குறிப்பிட்டுள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் தான் ஒரு பேட்டராக மட்டுமே அணிக்கு தேவைப்படுவதாலும், அந்த பேட்டிங் வரிசையில் விளையாட பலர் இருப்பதாலும்தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை