பழைய நிகழ்வுகளை நினைத்து கவலைப் படப்போவதில்லை - டெம்பா பவுமா

Updated: Mon, Jan 17 2022 19:35 IST
“I Am Not Worried About What Happened In That 2018 Series”-Temba Bavuma (Image Source: Google)

தென்ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.

இதையடுத்து இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 19ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்தத் தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி நேற்று முன்தினம் அந்த பதவியிலிருந்து விலகினார். இதை அடுத்து தற்போது நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஏற்கனவே விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் கடந்த மாதம் காயமடைந்த ரோகித் சர்மா இந்த தொடரில் பங்கேற்க முடியாத காரணத்தால் அவருக்குப் பதில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் இந்த தொடரில் மட்டும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். அதேபோல் துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா விளையாட உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரை போலவே விரைவில் துவங்க இருக்கும் ஒருநாள் தொடரிலும் இந்தியாவை தோற்கடிப்போம் என தென்ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்“அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரில் எங்கள் எங்களின் கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. 2018இல் நடந்ததைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. இந்த முறை எங்களின் புதிய யுக்திகளை முழு முயற்சியுடன் செயல்படுத்தி வெற்றி பெறுவதை பற்றியே அக்கறை கொண்டுள்ளேன். 

இந்தியா போன்ற அணிக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரை வெற்றி பெற்றால் அது எங்களின் அணிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்.

தென் ஆப்பிரிக்க வெள்ளை பந்து அணியை பற்றிய மோசமான கருத்துக்கள் தற்போது மாறியுள்ளன. இதற்கு முந்தைய காலங்களில் நாங்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வதிலும், வெளிநாடுகளில் வெற்றியை பெறுவதிலும் தடுமாறி வந்தோம். ஆனால் சமீபத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய நாங்கள் அவை அனைத்தையும் தவறு என நிரூபித்தோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை