தோனியின் தலைமைப் பண்பு குறித்து மனம் திறந்த சஹால்!

Updated: Wed, Feb 02 2022 17:15 IST
'I got hit for 64 runs in a T20. Then Mahi Bhai came to me': Chahal reveals how Dhoni supported him (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சமயத்தில், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது இடத்தை புதிதாக வந்த சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் பிடித்துக் கொண்டனர்.

இதில், சாஹல் கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்திய அணிக்குள் நுழைந்தார். தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், அவரது தலைமையில் ஆடிய சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர், மிகச் சிறப்பாக பந்து வீசி, எதிரணியினரை திணறடித்தனர்.

தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டே, அவருக்கு சிறந்த ஐடியாக்களை வழங்க, அதன்படி செயல்பட்ட குலதீப் - சாஹல், அதிக விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து, தோனி அணியில் இருந்து விலகவே, இந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடத்தை தக்க வைக்க கடுமையாக அவதிப்பட்டனர். தற்போது வரை கூட, அவர்களுக்கு மாறி மாறி தான், இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இதில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பிடித்த சாஹல், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடரிலும் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், ஒரு போட்டிக்கு மத்தியில், தோனி தனக்கு வழங்கிய ஆதரவு ஒன்றைக் குறித்து, சாஹல் தற்போது மனம் திறந்துள்ளார்.

இது பற்றி பேசிய சாஹல்,  “தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி 20 போட்டி ஒன்றில், நான் 64 ரன்களை அள்ளிக் கொடுத்தேன். அந்த அணி வீரர் கிளேசன், என்னுடைய பந்தினை நாலாபுறமும் ஓட விட்டுக் கொண்டிருந்தார். மஹி பாய் என்னிடம், மறுமுனையில் இருந்து பந்து வீச சொன்னார். நான் அப்படி செய்த போதும், பந்து சிக்சருக்கு சென்றது.

பிறகு, தோனி பாய் என் பக்கத்தில் வந்த போது, "இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?" என கேட்டேன். "எதுவும் செய்ய வேண்டாம். நான் உன்னை பார்க்க தான் வந்தேன். இன்று உனது நாளாக அமையவில்லை. நீ முயற்சி செய்கிறாய். ஆனால், ஏதும் நடக்கவில்லை. அதிகமாக இதை பற்றி யோசிக்காதே. உனது 4 ஓவர்களை முடித்து விட்டு, கூலாக இரு" என தோனி பதில் கூறினார்.

அப்படிப்பட்ட ஒரு நேரத்தில், என்னை யாராவது திட்டியிருந்தால், எனது நம்பிக்கையின் அளவு, இன்னும் குறைந்து போயிருக்கும். அதே போல, தோனி இன்னொரு விஷயமும் கூறுவார். அனைத்து போட்டிகளிலும், உன்னால் சிறப்பாக செயல்பட முடியாது. சில நேரத்தில், மற்றவர்களும் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்று. 

அது உண்மை தான். அனைத்து நாளும், நமக்கானதாக அமைந்து விடாது. சில நேரம் நாம் மோசமாக பந்து வீசினால், அதனை பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல், தோனி கூறுவதை போல கடந்து செல்ல வேண்டும்” என சாஹல் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் இருந்து தோனி விலகினாலும், தொடர்ந்து அவரது கேப்டன்சி மற்றும் தலைமை திறன் குறித்து, பல வீரர்கள் கருத்து தெரிவித்து வருவது, தோனி இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த தலைவர் என்பதை எடுத்துரைக்கும் வகையில் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை