ஐபிஎல் 2022: ‘இது முடிவல்ல’ - தினேஷ் கார்த்திக்!

Updated: Wed, Apr 06 2022 09:44 IST
I Was Telling Myself I’m Not Done Yet – Dinesh Karthik On Cricketing Career (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற 13ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 70* ரன்களும், ஹெய்ட்மர் 42* ரன்களும் எடுத்தனர்.

அதன்பின் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டூபிளசிஸ் (29) மற்றும் அனுஜ் ராவத் (26) ஆகியோர் சுமாரான துவக்கம் கொடுத்தனர். இதன்பின் களத்திற்கு வந்த விராட் கோலி (5), டேவிட் வில்லே (0) மற்றும் ரூத்தர்போர்ட் (5) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த தினேஷ் கார்த்திக் – சபாஷ் அகமத் ஜோடி, தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெங்களூர் அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபாஷ் அகமத் 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். 

சபாஷ் அகமத் விக்கெட்டை இழந்த பின்பும் அதிரடி ஆட்டத்தை கைவிடாத தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 44* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.1 ஓவரிலேயே இலக்கை அசால்டாக எட்டிய பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

கடைசி வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாகவும் முடித்து கொடுத்த தினேஷ் கார்த்திக்கே இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஆட்டநாயகன் விருது வென்றபிறகு தினேஷ் கார்த்திக் பேசுகையில், “கடினமாக உழைத்துள்ளேன். கடந்த வருடங்களில் நான் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும் என அடிக்கடி நினைத்து கொண்டே இருப்பேன். எவ்வளவு சொதப்பினாலும், இது முடிவு அல்ல என்பதை என்னிடம் நான் கூறி கொண்டே இருப்பேன். எனக்கு சில லட்சியங்கள் உள்ளது, அதை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டியது எனது கடமை. 

ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரு ஓவருக்கு குறைந்தது 12 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை கடைசி நேரத்தில் ஏற்பட்டது, இது சவாலானது தான் என்றாலும் இதை செய்து தான் ஆக வேண்டும். அதற்கான வழியை கண்டறிய பொறுமையை கையாள வேண்டும் அதை தான் நானும் செய்தேன்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை