ஐபிஎல் ஏலத்தில் ஷன்காவை எந்த அணியும் வாங்காதது ஆச்சரியமாக உள்ளது - கௌதம் கம்பீர்!
ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான மினி ஏலம், கடந்த டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சாம் கரன் போன்றவர்கள் மட்டும்தான் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தார்கள்.இருப்பினும், ஆசியக் கோப்பை வென்ற இலங்கை அணிக் கேப்டன் தஷுன் ஷனகாவை எந்த அணியும் வாங்கவில்லை. 50 லட்சத்தை மட்டும்தான் அடிப்படை தொகையாக நிர்ணயம் செய்திருந்தார். அப்படியிருந்தும் எந்த அணியும் இவரை வாங்கவில்லை.
இந்நிலையில் தற்போது இந்தியா, இலங்கை இடையேயான டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஷனகா 206.12 ஸ்ட்ரைக் ரேட்டில் 101 ரன்களை குவித்து, இத்தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரராக இருக்கும். மேலும், 2 விக்கெட்களை கைப்பற்றி பெஸ்ட் ஆல்-ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். கிட்டதட்ட பென் ஸ்டோக்ஸ் போன்றுதான் ஆசிய மண்ணில் இவரது செயல்பாடு இருக்கிறது. இப்போது மட்டுமல்ல, இந்தியாவுக்கு எதிராக இவர் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார்.
அப்படியிருந்தும், மினி ஏலத்தில் இவரை எந்த அணியும் வாங்காததுதான் ஆச்சரியமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது,இந்திய அணி முன்னார் வீரர் கௌதம் கம்பீர், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “தற்போது நடைபெற்று வரும் இந்தியா, இலங்கை டி20 தொடர் மட்டும், ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன் நடைபெற்றிருந்தால், தஷுன் ஷனகா பெரிய தொகைக்கு ஏலம் போயிருப்பார். சில அணிகளிடம், இவரை வாங்குவதற்கு பணமே இருந்திருக்காது. ஷனகாவை மினி ஏலத்தில் எந்த அணியும் வாங்காதது ஆச்சரியமாகத்தான் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.