இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வந்த ஹர்பஜன் சிங், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

Advertisement

டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருந்த போதும், இந்திய அணி தனக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியிருந்தது.

Advertisement

அதே போல, எம் எஸ் தோனியைப் போன்று, தனக்கும் இந்திய அணியில் அதிக வாய்ப்பு கிடைத்திருந்தால், டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி, சாதனை படைத்திருப்பேன் என்றும் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டிருந்தார். இதனால், தோனி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு இடையே மோதல் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் வலம் வரத் தொடங்கின. இந்நிலையில், இது பற்றிய விளக்கத்தை, ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார்.

தோனியுடனான உறவு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன் சிங், 'மிகவும் சிறப்பாக தான் உள்ளது. நான் தோனியை திருமணம் ஒன்றும் செய்து கொள்ளவில்லை' என சற்று நக்கலாக ஹர்பஜன் சிங் குறிப்பிட்டார். தொடர்ந்து , இந்திய அணியில் முன்பு நடந்த சில விஷயங்களை சுட்டிக் காட்டிப் பேசிய ஹர்பஜன் சிங், 'கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பிறகு, அணியில் சில தவறுகள் நடந்துள்ளது என்றே நான் கருதுகிறேன்.

2011 ஆம் ஆண்டு உலக கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி, அதன் பிறகு ஒரு போட்டியில் கூட இணைந்துஆடியதில்லை. நான், சேவாக், யுவராஜ் சிங் மற்றும் கவுதம் கம்பீர் என நாங்கள் அனைவரும் இந்தியாவுக்காக ஆடித் தான் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் தொடர்ந்து ஆடிய போதும், எங்களுக்கு அதன் பிறகு, பெரிய அளவில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலிருந்து சில பேர் மட்டும் தான், 2015 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இடம்பெற்றிருந்தோம். இதற்கு எல்லாம் என்ன தான் காரணம்?.

Advertisement

தோனி மீது எனக்கு எந்த கோபமோ, குறைகளோ இல்லை. என்னுடைய சிறந்த நண்பராக தான் அவர் இருந்து வருகிறார். பிசிசிஐ மீது தான் எனக்கு குறைகள் உள்ளது. அந்த சமயத்தில், பிசிசிஐ ஒரு அரசாங்கம் போல நடந்து கொண்டது. தேர்வுக் குழு அதிகாரிகள் அந்த நேரத்தில் நியாமமாக நடந்து கொள்ளவில்லை. அணியை ஒற்றுமையாக இருக்க விடாத அவர்கள், வீரர்கள் சிறப்பான ஃபார்மில் இருந்த போதும், புது புது வீரர்களை அணிக்குள் கொண்டு வந்தார்கள்.

இது பற்றி, நான் பலமுறை நேரடியாக கேள்வியை கேட்டேன். ஆனால், தேர்வாளர்கள் எங்களின் கையில் ஒன்றுமே இல்லை என கூறினார்கள். இப்படி ஒரு பதிலைக் கூறுவதற்கு அவர்கள் ஏன் தேர்வுக்குழு அதிகாரிகளாக இருக்க வேண்டும்?' என பிசிசிஐ மீது ஹர்பஜன் சிங், பல விதமான குற்றச்சாட்டுகளை அடுக்கித் தள்ளியுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News