இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் மொஹாலியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 357/6 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாம் நாளான சனிக்கிழமை இந்திய அணி 129.2 ஓவா்களில் 574/8 ரன்களை குவித்திருந்த போது கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தார்.
ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக விளையாடி 228 பந்துகளில் 3 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 175 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை தரப்பில் லக்மல், விஷ்வா ஃபொ்ணான்டோ, எம்புல்டெனியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பின்னர், முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய இலங்கை அணி 174 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆல் அவட் ஆனது. சிறப்பாக விளையாடிய நிசாங்கா ஆட்டம் இழக்காமல் 61 ரன்கள் எடுத்திருந்தார். பேட்டிங்கில் கலக்கிய ஜடேஜா பந்துவீச்சிலும் இலங்கையை திணறடித்தார்.
இந்தியா சார்பாக ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதன்பின் 400 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்த இந்தியா, முதல் இன்னிங்ஸில் போதுமான ரன்கள் எடுக்காத இலங்கையை பாலோ ஆன் செய்ய பணித்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸை போலவே சொதப்பினர்.
தொடக்க வீரர் திரிமானே ரன் ஏதும் எடுக்காமலும் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய நிசாங்கா 6 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். இதனால் தேநீர் இடைவெளியின்போது, இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களை எடுத்திருந்தது.
அதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் நிரோஷன் டிக்வெல்லா மட்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார்.
இதனால் இலங்கை அணி 178 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றறது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.