வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் போட்டி ஜூலை 22ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போர்ட் ஆப் ஸ்பெய்ன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பம் முதலே நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதில் ஒருபுறம் ஷிகர் தவான் மெதுவாக பேட்டிங் செய்ய, மறுபுறம் கில் அதிரடியாக ரன்களை குவித்தார்.

Advertisement

பவர்பிளே ஓவர்கள் முடிந்தும் அட்டகாசமாக பேட்டிங் செய்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தபோது 6 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (53) ரன்களில் சுப்மன் கில் ரன் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு சிறப்பாக பேட்டிங் செய்து கேப்டன் தவானுடன் 2ஆவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினார்.

இதில் நங்கூரமாக 34 ஓவர்கள் வரை விளையாடி 10 பவுண்டரி 3 சிக்சருடன் சதத்தை நெருங்கிய ஷிகர் தவான் துரதிஷ்டவசமாக 97 ரன்களில் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு ஏமாற்றமடைந்தார். அடுத்த சில ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களிலும் நீண்ட நாட்கள் கழித்து வாய்ப்பு பெற்ற சஞ்சு சம்சன் 12 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

அதனால் சரிவை சந்தித்தாலும் கடைசி நேரத்தில் தீபக் ஹூடா 27 ரன்களும் அக்சர் படேல் 21  ரன்களும் எடுத்து ஓரளவு கைகொடுத்ததால் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்ஸாரி ஜோசப் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். 

இதையடுத்து 309 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தொடக்க வீரர் சாய் ஹோப் ஆரம்பத்திலேயே 7 (18) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனாலும் அடுத்ததாக களமிறங்கிய ப்ரூக்ஸ் தொடக்க வீரர் கை மேயர்ஸ் உடன் ஜோடி சேர்ந்து நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 2ஆவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீசை காப்பாற்றிய இந்த ஜோடியில் ப்ரூக்சை 46 ரன்களில் அவுட் செய்த ஷார்துல் தாகூர் அடுத்த ஓவரிலேயே 10 பவுண்டரி 1 சிக்சருடன் மிரட்டிய கைல் மேயர்சை 75 ரன்களில் அவுட் செய்து திருப்புமுனை ஏற்படுத்தினார்.

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் - பிரெண்டன் கிங் உடன் 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 25 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோவ்மன் போவல் 6 ரன்களில் அவுட்டானதால் 196/5 என அந்த அணி மீண்டும் தடுமாறியது.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக பேட்டிங் செய்த பிரண்டன் கிங் 2 பவுண்டரி 2 சிக்சருடன் வெற்றிக்காகப் போராடி 54 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரின் அசத்தலால் வெற்றியை நெருங்கிய அந்த அணிக்கு கடைசி 33 பந்துகளில் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்ட போது 4 விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் இருந்ததால் இந்தியா எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அபாரமாக பேட்டிங் செய்த அகில் ஹொசைன் – ரோமரியா செஃபார்ட் ஜோடி சேர்ந்து அதிரடியான ரன்களை சேர்த்தனர்.

அதனால் கடைசி நேரத்தில் போட்டியில் திடீரென பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதை வீசிய முகமது சிராஜ் முதல் 2 பந்துகளில் 1 லெக் பைஸ் மட்டுமே கொடுத்தார். ஆனால் 3ஆவது பந்தில் பவுண்டரியை பறக்கவிட்ட செஃபர்ட் 4ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்ததால் பதற்றமடைந்த சிராஜ் 5ஆவது பந்தில் ஒயிட் வீசி பின்னர் 2 ரன்கள் கொடுத்தார். அதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 4 தேவைப்பட்ட போது அதை செபார்ட் அடிக்க தவறினார்.

Advertisement

இதனால் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்ற அசத்தியுள்ளது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் சிராஜ், சஹால், ஷார்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News