சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கொண்டு, சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் ராய்பூரில் நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதி போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜண்ட்ஸ் அணியும், திலகரத்ன தில்சான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணியும் முன்னேறின. 

Advertisement

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம் போல் வீரேந்திர சேவாக் - சச்சின் டெண்டுல்கர் இணை களமிறங்கியது. அதில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சேவாக் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த பத்ரிநாத்தும் 7 ரன்களில் நடையைக் கட்டினார். 

Advertisement

இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த சச்சின் - யுவராஜ் சிங் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்தினர். பின்னர் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த யுவராஜ் சிங் - யூசுப் பதான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை அரைசதம் கடந்து அணிக்கு உதவியது. 

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் யுவராஜ் சிங் 60 ரன்களையும், யூசுப் பதான் 62 ரன்களையும் சேர்த்தனர். 

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு தில்சன் - ஜெயசூர்யா இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. பின்னர் 21 ரன்களில் தில்சன் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 43 ரன்களில் ஜெயசூர்யாவும் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழக்க இந்திய அணியின் வெற்றி ஏறத்தாழ உறுதியானது. பிறகு ஆட்ட முடிவில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி, சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News