ஐபிஎல் 2022: புதுமைகளை புகுத்தும் அஸ்வின்!

Updated: Mon, Apr 11 2022 11:23 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 20ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க, நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படததால், 10 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்களை சேர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஷும்ரோன் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஒருபக்கம் ஷெட்மையர் அதிரடி காட்ட, மறுபக்கம் அஸ்வின் நிதானமாக விளையாடி வந்தார்.

இறுதியில் கடைசி இரண்டு ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், இதில் அதிரடி காட்டினால் மட்டுமே அணியால் ஸ்கோரை உயர்த்த முடியும் என்ற நிலை இருந்தது. அப்போது அஸ்வின் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறினார். அஸ்வினின் ரன் சேர்ப்பு வேகம் குறைவாக இருந்ததால், அவரை மாற்றிவிட்டு இளம் வீரர் ரியான் பராக்கை களத்துக்கு ராஜஸ்தான் அணி அனுப்பியது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 165/6 ரன்களை சேர்த்தது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ரிட்டயர்ட் அவுட் முறையில் ஆட்டமிழப்பது இதுதான் முதல்முறையாகும். போட்டி நடந்து கொண்டிருக்கும்போது பேட்ஸ்மேனுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது அடுத்த  பேட்ஸ்மேனை உள்ளே இறக்க விரும்பினாலோ, இதுபோல் ரிட்டயர்டு அவுட் செய்யப்படுவது வழக்கம். எனினும் இதுபோன்ற ரிட்டயர்டு அவுட்கள் இதுவரை பெரிய அளவில் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை