ஐபிஎல் 2022: சிஎஸ்கே வீரர்கள் குறித்த அறிவிப்புக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

Updated: Wed, Mar 16 2022 11:28 IST
Image Source: Google

இலங்கை கிரிக்கெட் தொடர் முடிந்ததை அடுத்து அனைவரின் கவனமும் தற்போது ஐபிஎல் பக்கம் திரும்பியுள்ளது. 15ஆவது ஐபிஎல் திருவிழா வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்காக அனைத்து அணிகளும் மஹாராஷ்டிராவை சுற்றியுள்ள மைதானங்களில் பயிற்சியை தொடங்கிவிட்டன. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத் நகரில் உள்ள லால்பாய் மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். தோனியின் தலைமையில் மிக பலமான அணியாக சிஎஸ்கே இருந்தாலும், அடுத்த 48 மணி நேரம் தான் சிஎஸ்கேவின் வெற்றிகளை நிர்ணயிக்கப்போகிறது என்ற சூழல் ஊருவாகியுள்ளது. இதற்கு காரணம் பிசிசிஐ தான்.

ஏனென்றால் சிஎஸ்கேவின் இரு முக்கிய வீரர்களாக பார்க்கப்படும் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் பந்துவீச்சாளார் தீபக் சஹார் ஆகியோர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளனர். சஹாருக்கு காலில் தசை நார் கிழிவும், ருதுராஜுக்கு கையில் காயமும் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல் தொடருக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மெகா ஏலத்தின் போது சிஎஸ்கே பெரியளவில் பணத்தை கொட்டி ரூ. 14 கோடிக்கு தீபக் சஹாரை வாங்கியது. இதே போல ருதுராஜ் ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர்கள் இருவரின் உடற்தகுதி தேர்வு முடிவுகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்படும் என பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் சென்னை அணி பதற்றத்துடன் எதிர்நோக்கி காத்துள்ளது.

எனினும் இதில் தீபக் சஹார் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது. ஏனென்றால் தசை நார் கிழிவு ஏற்பட்டால், குறைந்தபட்சம் ஒன்றரை மாதம் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். அதன்படி பார்த்தால் தீபக் சஹார் முதல் பாதி ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை