ஐபிஎல் விதிமுறை மீறல் - சாம் கரண், ஃபாஃப் டூ பிளெசிஸிற்கு அபராதம்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முதல் பாதி கட்டத்தை கடந்து இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஒரு ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
அதேபோல் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அனி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் நேற்றைய லீக் போட்டிகளில் ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆர்சிபி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸிற்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரன், நடுவரின் முடிவை ஏற்க மறுத்ததன் காரணமாக அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம் கரன் நடுவரின் குற்றச்சாட்டை ஒப்புகொண்டுள்ளதாகவும் ஐபிஎல் நிர்வகாக குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.