IRE vs IND, 2nd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!

Updated: Sun, Aug 20 2023 22:56 IST
IRE vs IND, 2nd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா! (Image Source: Google)

இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ய்ஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அதிரடியாக தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 18 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய திலக் வர்மா ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ருதுராஜுடன் இணைந்த சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார். அதன்பின் ஜோஷுவா லிட்டில் வீசிய 11ஆவது ஓவரில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி ஆட்டத்தை மொமண்டத்தை மாற்றினார். 

அதன்பின் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் தனது 2ஆவது சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்திருந்த ருதுராஜ் கெய்க்வாட்டும் 58 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் ரிங்கு சிங் - ஷிவம் தூபே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து இருவரும் சிக்சர் மழை பொழிய அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இறுதியில் ரிங்கு சிங் 3 சிக்சர், 2 பவுண்டரி என 38 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, ஷிவம் தூபே 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான பால் ஸ்டிர்லிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கர் ரன்கள் ஏதுமின்றியும், ஹாரி டெக்டர் 7 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கர்டிஸ் காம்பரும் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரரான ஆண்டி பால்பிர்னி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பால்பிர்னி 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 72 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த பேரி மெக்கர்த்தியும் அடிக்க முயன்று 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இறுதிவரை களத்தில் நின்று அதிரடி காட்டிய மார்க் அதிர் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தாரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை