ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்ற முன்னாணி நிறுவனங்கள் கடும் போட்டி!

Updated: Fri, Jun 10 2022 12:52 IST
Image Source: Google

இந்தியாவின் செல்வமிக்க கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடியுள்ளது. இந்நிலையில் அடுத்த சீசன் முதல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தை பிசிசிஐ நடத்தவுள்ளது.

தற்போதுவரை ஒளிபரப்பு உரிமையை பெற்றிருந்த ஸ்டார் நெட்வர்க்கின் உரிமம் இந்தாண்டு முதல் நிறைவடைகிறது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான உரிமையை பெறுவதற்கான ஏலம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையை அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பெறுவதற்காக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்கும், அமேசானின் நிறுவனர் ஜெஃப் பிஜோஸுக்கும் கடும் போட்டி நிலவுகிறது. 

உலகம் முழுவதும் 60கோடிக்கும் அதிகமான பார்வையார்களையும், ரசிகர்களையும் கொண்ட ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை வாங்குவதற்கு இந்த இரு கோடீஸ்வரர்களையும் தவிர்த்து டிஸ்னி ஸ்டார், சோனி நிறுவனம்,  ஜீ என்டர்டைன்மென்ட், ஆப்பிள், கூகுள், ஸ்கை ஸ்போர்ட்ஸ், தென் ஆப்பிரிக்காவின் சூப்பர் ஸ்போர்ட் ஆகியவையும் விருப்பமனுக்கள் அளித்துள்ளன. 

இந்த ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் பங்கேற்க இதுவரை 10 நிறுவனங்கள் பிசிசிஐ அமைப்பிடம் தலா ரூ.29.50 லட்சம் கட்டணத்தையும், விண்ணப்பத்தையும் அளித்துள்ளன. இந்தத் தொகை ஏலத்தில் பங்கேற்பதற்கானது, இது திரும்பத் தரப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

2023 முதல் 2027ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது. ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை, அதாவது முதல் போட்டி, 4 ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் அடங்கும், உலக நாடுகளுக்கான ஒளிரபப்பு உரிமை என 4 பிரிவுகளில் வழங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் வரும் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்தை எப்படியாவது கைப்பற்றும் நோக்கில் அம்பானி, பிஜோஸ் ஆகிய இரு கோடீஸ்வரர்களும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 21 ஃபாக்ஸ் சென்சூரி நிறுவனத்தில் பணியாற்றிய அனில் ஜெயராஜ், குல்சன் வர்மா இருவரையும் இந்த டீலை முடிப்பதற்காக அம்பானி நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

2023 முதல் 2027ம் ஆண்டுவரையிலான ஒளிபரப்பு உரிமைக்கு பிசிசிஐ நிர்ணயித்திருக்கும் ரிசர்வ் விலை ரூ.32,890 கோடியாகும். இது கடந்த 5 ஆண்டுகளுக்கான தொகையிலிருந்து ஒரு மடங்கு கூடுதல்தான். 

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா, தி வால்ட் டிஷ்னி நிறுவனம் ஆகியவற்றுக்கு தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமத்தை வழங்கியிருந்தது. முதன்முதலில் 10 ஆண்டுகளுக்கு சோனி பிக்சர்ஸ் குழுமம் ரூ.8200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனத்தைப் பொறுத்தவரை இதுவரை ஏராளமான விளையாட்டுகளை மேற்கத்திய நாடுகளில் ஒளிபரப்பியுள்ளது. குறிப்பாக கால்பந்து போட்டிகளுக்கான ஏராளமான ஒளிபரப்பு உரிமைகளை வாங்கி அமேசான் ஒளிபரப்பி வருகிறது. கால்பந்து போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமையே அமேசான் நிறுவனத்துக்கு 2033ஆம் ஆண்டுவரை இருக்கிறது

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஏற்கெனவே 5 ஆண்டுகள் ஒளிபரப்பு உரிமைகளை பெற்று ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பிய அனுபவம் உண்டு. அந்த அனுபவத்தை வைத்து இந்த ஆண்டும் உரிமைகளைப்பெற கடும் போட்டி கொடுக்கும். டிஸ்னி ஸ்டாருக்கு மட்டும் 13.80 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.இதற்கிடையே ஐபிஎல் போட்டியின் ஆன்-லைன் ஒளிபரப்பு உரிமையை மட்டும் வாங்குவதற்காக ஆப்பிள் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை