Eng vs NZ: ஐபிஎல் தொடர் உதவியாக இருந்தது - ஜானி பேர்ஸ்டோவ்!

Updated: Thu, Jun 16 2022 14:00 IST
Jonny Bairstow points to advantages of playing the IPL after Trent Bridge blitz (Image Source: Google)

நியூசிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கடைசி நாளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 299 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி அட்டகாசமாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. 

இதில் ஜானி பேர்ஸ்டோவ் 92 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்களும் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவில் காபா மைதானத்தில் இந்திய அணி கடைசி நாளில் கடினமான இலக்கை விரட்டியதுபோல இங்கிலாந்து அணி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடைசி நாளில் அதிரடியாக விளையாடி மறக்க முடியாத வெற்றியை அடைந்தது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டியபோது (குறைந்தது 100 ரன்கள் எடுத்த வீரர்களில்) அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் பேர்ஸ்டோவ். 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியினால் தான் அடைந்த பலன்கள் பற்றி பேர்ஸ்டோ கூறியதாவது: “(நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இருப்பதால்) நான் ஐபிஎல் போட்டியில் விளையாடக் கூடாது, அதற்குப் பதிலாக கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பலரும் சொன்னார்கள். ஒரு டெஸ்ட் தொடருக்கு முன்பு நான்கு முதல்தர ஆட்டங்களில் விளையாடினால் அது நல்ல பயிற்சியாக இருக்கும் எனச் சொல்வார்கள். 

ஆனால் தற்போதைய கிரிக்கெட் அட்டவணைப்படி அது சாத்தியமில்லை. ஐபிஎல் போட்டியில் மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுவீர்கள். அதனால் சிறப்பாக விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும். மிகச்சிறந்த போட்டிகளில் மிகச்சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடுகிறோம். அந்தப் போட்டிகளில் அழுத்தமான தருணங்களில் நன்கு விளையாடினால் அது பலவிதங்களிலும் உதவும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை