டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ரீஎண்ட்ரி கொடுக்கும் யார்க்கர் மன்னன்!

Updated: Tue, May 11 2021 20:10 IST
Image Source: Google


இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் ஐபிஎல் தொடரின் போது வீரர்களிடையே கரோனா பரவியதையடுத்து, டி20 உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்தும் திட்டத்தை கைவிட்டது ஐசிசி. 

ஆனால் தற்போது வரை உலக கோப்பை தொடர் எந்த நாட்டில் நடைபெறும் என எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஐசிசி வெளியிடவில்லை. இதற்கிடையில் இலங்கை அணியானது, இந்த உலகக் கோப்பை தொடருக்காக அந்த அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளரான லசித் மலிங்காவை மீண்டும் அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து பேசிய இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் விக்ரமசிங்கே, டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியில் நிச்சயமாக லஷித் மலிங்கா இருக்கிறார். 2021 மற்றும் 2022 என அடுத்தடுத்து வரும் இரண்டு டி20 உலகக் கோப்பையில் அவரை இலங்கை அணியில் விளையாட வைக்கும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். லஷித் மலிங்காவின் திறமையைப் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும். மேலும் எங்கள் அணிக்காக அவர் சிறப்பாக செயல்பட்டதை என்றைக்கும் மறக்க மாட்டோம். எங்களுடைய முடிவு குறித்து ஓரிரு நாள்களில் மலிங்காவிடம் பேச உள்ளோம்” என்று தெரிவித்தார். 

லஷித் மலிங்கா ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த அவர், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாகவே மும்பை அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனவே மும்பை அணி இந்த ஆண்டு அவரை அணியிலிருந்து விடுவித்தது. 

லஷித் மலிங்கா கடைசியாக இலங்கை அணிக்காக 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்கி விளையாடினார். பின்னர், எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அவரை அணியில் சேர்க்கும் முடிவை எடுத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை