ஓய்வு பெறுவது குறித்து சூசகமாக அறிவித்த ஷமி- ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில்,இந்திய அணியின் சீனியர் பவுலர் முகமது ஷமி கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அதன் பின்னர் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த அவர் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பினார். இதன் காரணமாக வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது ஓய்வு முடிவை சூசகமாக அறிவித்துள்ளார்.
போட்டி குறித்து பேசிய அவர், “இந்திய அணி சமீப காலமாக டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எந்தவித அழுத்தங்கள் இன்றி விளையாடலாம். கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பெற்ற வெற்றிகள் வீரர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மிக சிறப்பானதாக இருக்கும்.
எனக்கு பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடி அனுபவம் உள்ளது. நான் எப்போதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருக்கப் போவதில்லை. ஒரு முடிவு உள்ளது. எனவே எனக்கு தெரிந்த விஷயங்களை இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். தற்போது அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வருகிறேன்” எனக் கூறியுள்ளார். இது ஷமி ஓய்வு பெறப் போகிறேன் என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
30 வயதாகும் முகமது ஷமி இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். அதே போல 79 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 148 விக்கெட்களையும், டி20 கிரிக்கெட்டில் 12 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.