எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன் - முகமது ஷமி!

Updated: Wed, Nov 15 2023 23:39 IST
எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன் - முகமது ஷமி! (Image Source: Google)

ஐசிசி உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் நான்காவது முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தனர். இதில் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக சதம் விளாசினர்.

இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியும் அதிரடியாக விளையாடியது. ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் அவ்வளவுதான் என இந்திய ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், முகமது ஷமி வீசிய ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது. இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இப்போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் வில்லியம்சன் கேட்ச் தவற விட்டதால் மோசமாக உணர்ந்ததாக தெரிவிக்கும் ஆட்டநாயகன் ஷமி அதற்காக தாமே ரிஸ்க் எடுத்து வேகத்தை மாற்றி விக்கெட்டை எடுத்ததாக கூறியுள்ளார். மேலும் 2015, 2019இல் தவற விட்ட உலகக்கோப்பை வாய்ப்பு இம்முறை மீண்டும் வைத்துள்ளதால் அதை விட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய அளவில் விளையாடாத நான் என்னுடைய வாய்ப்புக்காக காத்திருந்தேன். யார்கர், மெதுவான பந்துகளை வீசுவதைப் பற்றி யோசித்து வைத்திருந்தேன். புதிய பந்தில் நிறைய விக்கெட்டுகளை எடுக்க முயற்சிக்கிறேன். வில்லியம்சன் கேட்ச் தவற விட்டதால் மோசமாக உணர்ந்தேன். அதற்காக வேகத்தை குறைத்து வீசிய பந்துகளில் அவர்கள் நல்ல ஷாட்டை அடித்து விளையாடிய போதிலும் நான் சில ரிஸ்க் சான்ஸ் எடுத்தேன்.

பிட்ச் நன்றாக இருந்த நிலையில் இலக்கு அதிகமாக இருந்தது. அதே சமயம் மெதுவான பந்துகள் வேலை செய்யவில்லை. இந்த வெற்றி அபாரமான உணர்வை கொடுக்கிறது. 2015, 2019 உலக கோப்பை அரையிறுதியில் நாங்கள் தோற்றோம். எனவே தற்போது எனக்கு கிடைத்த வாய்ப்பில் அசத்துவதற்கு நான் முயற்சிக்கிறேன். இந்த இறுதிப்போட்டி வாய்ப்பு எங்களுக்கு மீண்டும் கிடைக்குமா என்பது தெரியாது” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை