ஐபிஎல் 2022:  கேப்டன்சியிலிருந்து ஜடேஜா விலகியது ஏன்?

Updated: Sun, May 01 2022 12:26 IST
MS Dhoni to lead CSK after Ravindra Jadeja steps down to focus on his game (Image Source: Google)

ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக சொதப்பி, முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.இனி வரும் 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். 

இந்த 8 போட்டிகளிலும் சொதப்பியதற்கு முக்கிய காரணம் ஓபனர் ருதுராஜ் ஃபார்ம் அவுட், மொயின் அலிக்கு காயம், தீபக் சஹார் இல்லாதது, பௌலர்கள் முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிடோரியஸ் சொதப்பல் என காரணங்களை அடுக்கிக்கொண்டே சொல்லலாம்.

இருப்பினும், இதில் முதன்மை காரணமாக பார்க்கப்படுவது கேப்டன் ரவீந்திர ஜடேஜாதான். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படக் கூடிய இவர், கேப்டன் பதவி கிடைத்த பிறகு அழுத்தங்கள் காரணமாக சிறப்பாக செயல்படவில்லை. சுலபமான கேட்சைகூட விட்டுவிடுகிறார். பேட்டிங்கிலும் சிறப்பாக சோபிக்கவில்லை. பந்துவீச்சிலும், எப்படியாவது 6 பந்துகளை போட்டுவிட்டால்போதும் என்ற மனநிலையில்தான் செயல்பட்டு வருகிறார்.

இப்படி அழுத்தங்களுடன் இருக்கும் இவர், அடுத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சி செய்து வந்தார். அப்போது இவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. தடுமாறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை நடைபெற்ற அணி மீட்டிங்கில், சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டிக்கான திட்டங்களை வகுக்க மீட்டிங் ஒன்று நடைபெற்றது. தோனி தொடர்ந்து பேசி வந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து கேப்டன் ஜடேஜாவை பேச அழைத்தார். அப்போது பேசிய ஜடேஜா, “பயிற்சியின்போது என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் கேப்டன்ஸி அழுத்தம்தான் என நினைக்கிறேன். இன்னமும் 6 போட்டிகள்தான் எஞ்சியிருக்கிறது. இந்த 6 போட்டிகளிலும் கேப்டனாக இருந்தால், எனக்கு அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும். இதனால், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதை தவிர எனக்கு வழியில்லை. இந்த முடிவினை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்” என யாரும் எதிர்பாராத வகையில் பேசிவிட்டு அமர்ந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து பேசிய தோனி, “ஜடேஜாவின் முடிவினை அனைவரும் மதித்துத்தான் ஆக வேண்டும். இந்திய அணிக்கு அவர் தேவை. ஐபிஎலால் அவரது எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. அடுத்த 6 போட்டிகளுக்கும் தானே தலைமை தாங்குகிறேன்” எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்துதான் அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை உடனே வெளியிட்டிருக்கிறது.

இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை