டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த ஸ்பின்னர் தான் இடம்பெற வேண்டும் - முரளிதரன்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர், இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் அறிமுகமாவதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது. இஷான் கிஷன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, சேத்தன் சக்காரியா, நிதிஷ் ராணா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய பல இளம் வீரர்கள் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை பெற்றனர்.
சாஹல் - குல்தீப் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சு ஜோடி 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்காக இணைந்து ஆடும் வாய்ப்பையும் பெற்றனர். இந்த டி20 தொடர் இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் என்பதால், இந்த தொடரில் ஆடிய வீரர்கள் குறித்து விவாதிக்கப்பட்டுவருகிறது.
வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐபிஎல்லில் அவர் சிறப்பாக பந்துவீசிவருகிறார். அதனால் அவர் குறித்த பேச்சும் இருக்கிறது. இதற்கிடையே, டி20 உலக கோப்பைக்கு முன்பாக, டி20 உலக கோப்பை நடக்கும் அதே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளும் நடக்கவுள்ளன. எனவே ஐபிஎல் தொடர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
யுஸ்வேந்திர சாஹல் கண்டிப்பாக இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக எடுக்கப்படுவார். குல்தீப் யாதவ், ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் முதன்மை தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குறித்து பேசியுள்ள முத்தையா முரளிதரன், “இந்திய அணியின் தேர்வு குறித்து பேச ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்லில் வீரர்கள் ஆடும் விதம், வீரர்களின் ஃபார்ம் ஆகியவற்றை பொறுத்துத்தான் அணி தேர்வு அமையும்.
எனது தேர்வு கண்டிப்பாக குல்தீப் யாதவ் தான். அவர் விக்கெட்டுகளை வீழ்த்தவல்ல பவுலர் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக ஐபிஎல்லில் அவர் ஆடும் அணி அவரை ஆடும் லெவனில் எடுப்பதில்லை. வருண் சக்கரவர்த்தி நல்ல பவுலர் தான் என்றாலும், அஜந்தா மெண்டிஸ் அல்லது சுனில் நரைன் அளவுக்கு கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.