சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகிய டி காக்!

Updated: Fri, Dec 31 2021 11:39 IST
'My Family Is Everything To Me': Quinton De Kock Hangs His Boots From Test Cricket (Image Source: Google)

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த டெஸ்டில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி காக் இரு இன்னிங்ஸிலும் 34, 28 ரன்கள் எடுத்தார். 

இந்நிலையில் குயின்டன் டி காக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்துள்ளார். தற்போது 29 வயதில் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. டி காக்கின் மனைவிக்கு விரைவில் முதல் குழந்தை பிறக்கவுள்ளது. இதனால் 2ஆவது மற்றும் 3ஆவது டெஸ்டுகளில் இருந்து டி காக் ஏற்கெனவே விலகிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓய்வு அறிவிப்பு குறித்த டி காக் தனது அறிக்கையில், “இந்த முடிவை நான் அவ்வளவு சுலபமாக எடுக்கவில்லை. வாழ்க்கையில் எது முக்கியம் என்கிற முடிவினால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். நானும் என் மனைவி சாஷாவும் எங்களுடைய முதல் குழந்தையை விரைவில் வரவேற்கவுள்ளோம். எனக்கு என் குடும்பம் தான் எல்லாமுமாக உள்ளது. 

எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் விருப்பமானது. இப்போது அதைவிடவும் நான் விரும்பும் ஒன்று உள்ளது. வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் உங்களால் வாங்க முடியும், காலத்தைத் தவிர. 

எனக்கு முக்கியமானவர்களுக்காக என் நேரத்தைச் செலவிட விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடுவது இத்துடன் முடியவில்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பங்கேற்பேன். அனைவரையும் ஒருநாள், டி20 தொடர்களில் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் தற்காலிக டெஸ்ட் கேப்டனாக இருந்தார் டி காக். இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கினார். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் டி காக்கை முன்வைத்து பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான ஆட்டத்தில் டி காக் விலகினார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். சில நாள்கள் மெளனத்துக்குப் பிறகு தனது விளக்கத்தை அவர் தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை