இங்கிலாந்து அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது. இப்போட்டிக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் டாஸ் தாமதமாகி, ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
அதன்பின் இப்போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் விக்ரம்ஜித் சிங் 10, மேக்ஸ் ஓடவுட் 7, டாம் கூப்பர் 17 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பாஸ் டி லீட் - கேப்டன் எட்வர்ட்ஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி லீட் 38 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய எட்வர்ட்ஸ் அரைசதம் கடந்தார்.
அதன்பி 78 ரன்கள் எடுத்திருந்த எட்வர்ட்ஸ் ரன் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க, அடுத்து வந்த நிடமானூர் 28, வான் பீக் 30 ரன்களைச் சேர்த்தனர்.
இதனால் 41 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி, ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளது.