PAK vs NEP, Asia Cup 2023: பாபர், இஃப்திகார் அதிரடி சதம்; பாகிஸ்தான் அணி ரன் குவிப்பு!

Updated: Wed, Aug 30 2023 18:51 IST
Image Source: Google

நடப்பாண்டு ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆசியக் கோப்பையில், 6 அணிகள் தலா 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, குரூப்-ஏவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளமும், குரூப்-பியில் வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் உள்ளன.

இதில் இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி முல்தானில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை நிதான மான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 14 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் பாபர் ஆசாம் அரைசதம் கடக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அகா சல்மானும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பாபர் ஆசாமுடன் இணைந்த இஃப்திகார் அஹ்மது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19ஆவது சதத்தை பதிவுசெய்ததுடன், 150 ரன்களையும் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக மறுபக்கம் அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அஹ்மது தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதில் இறுதியில் கேப்டன் பாபர் அசாம் 14 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 151 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்திகார் அஹ்மத் 11 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 109 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்துள்ளது. நேபாளம் அணி தரப்பில் சோம்பால் சமி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை