PAK vs NEP, Asia Cup 2023: நேபாளத்தை 104 ரன்களுக்கு சுருட்டி பாகிஸ்தான் அபார வெற்றி!

Updated: Wed, Aug 30 2023 21:43 IST
Image Source: Google

நடப்பாண்டு ஆசிய கோப்பை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி முல்தானில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை நிதான மான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 14 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் பாபர் ஆசாம் அரைசதம் கடக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முகமது ரிஸ்வான் 44 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அகா சல்மானும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் பாபர் ஆசாமுடன் இணைந்த இஃப்திகார் அஹ்மது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19ஆவது சதத்தை பதிவுசெய்ததுடன், 150 ரன்களையும் கடந்து அசத்தினார். அவருக்கு துணையாக மறுபக்கம் அதிரடியாக விளையாடிய இஃப்திகார் அஹ்மது தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இதில் இறுதியில் கேப்டன் பாபர் அசாம் 14 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 151 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஃப்திகார் அஹ்மத் 11 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 109 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்துள்ளது. நேபாளம் அணி தரப்பில் சோம்பால் சமி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நேபாள் அணி தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர், அணியின் தொடக்க வீரர்களான குஷால் புர்டல் 8, ஆசிஃப் ஷேக் 5 ரன்களுக்கும், ரோஹித் பௌடல் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் இணைந்த ஆரிஃப் சேக் - சோம்பால் கமி இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் ஆரிஃப் சேக் 26 ரன்களுக்கும், சோம்பால் கமி 28 ரன்களும் எடுத்த நிலையில் ஹாரிஸ் ராவுஃபின் அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை இழந்தனர். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களாலும் பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் நேபாள் அணி 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 4 விக்கெட்டுகளையும், ஷாஹின் அஃப்ரிடி, ஹாரிஸ் ராவுஃப் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை