ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரபரப்பாக நடைபெற்ற ஆசிய கோப்பையின் 2ஆவது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை கடைசி ஓவர் வரை போராடி தோற்கடித்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய பவுலர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

Advertisement

கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்ட அந்த அணிக்கு அதிக பட்சமாக முகமது ரிஸ்மான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களை எடுத்தார். அதை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானாலும் 2ஆவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களும் விராட் கோலி 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

Advertisement

அந்த சமயத்தில் வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட்டானதால் பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு 5வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா 35 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். இருப்பினும் அவருடன் பார்ட்னர்ஷிப் போட்டு கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ஹர்திக் பாண்டியா அதிரடியாக 33 ரன்கள் குவித்து சூப்பரான பினிஷிங் கொடுத்தார்.

அதனால் 19.4 ஓவரில் 148/5 ரன்களை எடுத்து போராடி வென்ற இந்தியா இதே மைதானத்தில் கடைசியாக கடந்த வருடம் மோதியபோது உலக கோப்பையில் முதல் முறையாக மறக்க முடியாத தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. இதனால் இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா அடுத்ததாக நாளை தேதியன்று ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. முன்னதாக இப்போட்டியில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டதால் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் வெற்றிக்காக கடைசி ஓவர் வரை போராடியது அனைவரின் பாராட்டை பெற்றது.

குறிப்பாக இந்த மாபெரும் போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய வலது கை வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா காயத்தால் கடைசி நேரத்தில் வெளியேறிய சாஹீன் அஃப்ரிடி இல்லாத குறையை தீர்க்கும் அளவுக்கு நெருப்பாக பந்து வீசினார். அதிலும் நம்பிக்கை நட்சத்திரமான கேஎல் ராகுலை முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட் செய்து மிரட்டிய அவர் மிடில் ஆர்டரில் சூப்பரான பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவையும் கிளீன் போல்ட்டாக்கினார்.

துபாயில் நிலவும் அதிகப்படியான வெப்பத்தை சமாளித்து முதல் போட்டியிலேயே இந்தியாவை தெறிக்க விடும் வகையில் பந்து வீசிய அவர் 4 ஓவர்களில் வெறும் 27 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்காக முழுமூச்சுடன் போராடினார். குறிப்பாக முதல் ஓவரிலேயே லேசான காயத்தை சந்தித்த அவர் இந்த மாபெரும் போட்டியில் எப்படியாவது பாகிஸ்தானை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வெறியுடன் வலியையும் பொறுத்துக் கொண்டு எஞ்சிய 3 ஓவர்களிலும் தொடர்ந்து 140+ கிமீ வேகத்தில் மிரட்டலாக பந்துவீசினார்.

Advertisement

குறிப்பாக பரபரப்பான 17ஆவது ஓவரில் அதிகப்படியான வலியையும் தாண்டி தங்களுக்கு சவால் விட்ட ஜடேஜாவுக்கு எதிராக அதிரடியான வேகத்தில் பந்து வீசி 4ஆவது பந்தில் அவுட்டும் செய்தார். ஆனால் ரிவியூ செய்து தப்பித்த ஜடேஜா இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் தனது கடைசி ஓவரை வீசி முடித்த அவர் தோல்வியும் உறுதியானதால் வலியுடன் பந்து வீசியதால் ஏற்பட்ட அதிகப்படியான வலியை தாங்க முடியாமல் பெவிலியன் திரும்பினார்.

அப்போது வலியை கட்டுப் படுத்த முடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டே சென்றதைப் பார்த்த பாகிஸ்தான் ரசிகர்களின் நெஞ்சங்கள் நொறுங்கிப் போனது. அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் அவரது தோள் மீது தட்டிக்கொடுத்து பெவிலியனுக்கு அழைத்துச் சென்றனர். முதல் போட்டியிலேயே நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் வலியுடன் பந்துவீசி கண்ணீருடன் வெளியேறிய இந்த இளம் வீரருக்கு இந்திய ரசிகர்களும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

 

Advertisement

அவருடைய காயம் பற்றி போட்டி முடிந்த பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், “அவர் (நசீம்) மிகவும் இளம் பந்துவீச்சாளர். ஆனால் அபாரமாக பந்து வீசினார். ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அவர் தற்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு லேசான காயங்கள் மட்டும் உள்ளது” என்று கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News