இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும் - ஹர்திக் பாண்டியா!

Updated: Mon, May 30 2022 13:56 IST
Pandya Says 'Legacy' Created After Debutants Gujarat Titans Win IPL 2022 (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. 

இப்போட்டியில்  டாஸ் வென்று பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்களை மட்டுமே குவி க்க 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நிர்ணயிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து எளிய இலக்கினை துரத்தி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் அவர்கள் அறிமுக சீசனிலேயே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

லீக் சுற்றுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி முன்னேறியது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற முதலாவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது அதனை தொடர்ந்து மீண்டும் இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இப்போட்டி ஒரு சிறப்பான போட்டியாக எங்களுக்கு அமைந்தது. ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக செயல்பட்டால் எப்படி வெற்றி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எங்கள் அணியை சுற்றி நல்ல சூழ்நிலை நிலவியது.

நானும், ஆசிஷ் நெக்ராவும் ப்ராப்பர் பவுர்களுடன் களம் இறங்க வேண்டும் என்று நினைத்தோம். மேலும் பேட்ஸ்மேன்களும் அவ்வப்போது சரியான பங்களிப்பை வழங்கியதனால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அதிக முறை பேட்ஸ்மேன்களின் ஆட்டம் மூலம் தான் வெற்றி கிடைக்கும். அதே வேளையில் பவுலர்களும் சில போட்டிகளில் வெற்றி பெற்று கொடுப்பார்கள். எங்கள் அணியில் இரண்டுமே சிறப்பாக அமைந்திருந்தது.

இந்த கோப்பையுடன் சேர்த்து நான் 5 முறை இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறேன் இது மிகச் சிறப்பான ஒன்று. இனிவரும் பயணத்திற்கு எங்கள் அணி பெற்ற இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும். கேப்டனாக முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை