ஐபிஎல் 15ஆவது சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கு படுமோசமாக தொடங்கியுள்ளது. இந்த சீசனுக்கு முன்பாக தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Advertisement

ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் இந்த சீசனில் ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. சிஎஸ்கே அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றுமே இந்த சீசனில் இதுவரை மிக சுமாராகத்தான் இருந்தது. 

Advertisement

பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா சோபிக்காததால் சிஎஸ்கேவிற்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அதுவே அந்த அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கையும் பாதிக்கிறது.

பவுலிங்கில் தீபக் சாஹர் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. தீபக் சாஹர் பவர்ப்ளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கக்கூடிய பவுலர். அவர் இல்லாததால் பவர்ப்ளேயில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. டெத் ஓவர்களை சிறப்பாக வீசும் பவுலர்களும் இல்லை. மிடில் ஓவர்களில் எதிரணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்குமளவிற்கான ஸ்பின்னர்களும் இல்லை. இப்படியாக பவுலிங்கும் மோசமாகவே உள்ளது.

டாப் ஆர்டர் பேட்டிங் தான் சிஎஸ்கேவிற்கு இந்த சீசனில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஃபாஃப் டுப்ளெசிஸும் சிஎஸ்கேவிற்காக தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். 

கடந்த சீசனில் 635 ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட் தான் அதிக ரன்களை குவித்த வீரர். அவரை விட டு பிளெசிஸ் வெறும் 2 ரன் மட்டுமே குறைவாக (633) அடித்திருந்தார். இவ்வாறாக சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருவரும் இணைந்து 1200க்கும் அதிகமான ரன்களை குவித்ததால்தான் கடந்த சீசனில் டைட்டிலை வென்றது சிஎஸ்கே. 

Advertisement

இந்த சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் டு பிளெசிஸை சிஎஸ்கே அணி விடுவித்த நிலையில், அவரை ஏலத்தில் எடுத்த ஆர்சிபி அணி கேப்டனாக நியமித்தது. டாப் ஆர்டரில் பேட்டிங்கில் ஆர்சிபிக்காக சிறப்பாக ஆடிவரும் டு பிளெசிஸ், கேப்டன்சியிலும் அசத்திவருகிறார். டு பிளெசிஸ் இல்லாதது சிஎஸ்கேவிற்கு பெரிய இழப்பு. அவர் இல்லாத இந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட்டும் தடுமாறிவருகிறார். 

சிஎஸ்கே அணிக்கு டாப் ஆர்டர் பேட்டிங் தான் பிரச்னையாக இருந்துவரும் நிலையில், தோனியையே ஓபனிங்கில் இறக்கிவிடலாம் என்று பார்த்திவ் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பார்த்திவ் படேல், “சிஎஸ்கே அணியை கடந்த காலங்களில் கட்டமைத்து வெற்றிகரமான வழிநடத்தியவர் தோனி. அவரது கெரியரை ஓபனிங் பேட்ஸ்மேனாகத்தான் தொடங்கினார். ஆனால் அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் வந்து இப்போது 7ஆம் வரிசையில் பேட்டிங் ஆடுகிறார். 

Advertisement

அவருக்கு அதிகபட்சம் 10-15 பந்துகள் தான் பேட்டிங் ஆட கிடைக்கின்றன. தோனியை கொஞ்சம் மேலே ஆட அனுப்பலாம். 3 அல்லது 4 அல்லது ஓபனிங்கில் கூட இறக்கலாம். ஓபனிங்கில் இறங்கி தோனி 14-15 ஓவர்கள் பேட்டிங் ஆடினால் அது சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News