ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் உச்சகட்ட பரபரப்பான போட்டியாக அமைந்தது பஞ்சாப் கிங்ஸ்  - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டி. இந்த சீசனில் மட்டுமல்லாது, ஐபிஎல் வரலாற்றில் மிகவும் பரபரப்பான போட்டிகளில் ஒன்றாக அது அமைந்தது.

Advertisement

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 189 ரன்களை குவிக்க, 190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணி, ஷுப்மன் கில்லின் அபாரமான பேட்டிங்கால் (59 பந்தில் 96 ரன்கள்) 19 ஓவரில் 171 ரன்கள் அடித்தது.

Advertisement

கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை பஞ்சாப் அணிக்காக வீசிய ஒடீன் ஸ்மித், முதல் பந்தை வைடாக வீசினார். மீண்டும் வீசிய முதல் பந்தை டேவிட் மில்லர் அடிக்காமல் விட்டதால், அந்த பந்தை வீணடிக்காமல் ஒரு ரன் ஓடினார். ஆனால் மறுமுனையிலிருந்து ஓடிவந்த ஹர்திக் பாண்டியாவால் பேட்டிங் க்ரீஸுக்கு வரமுடியவில்லை. பஞ்சாப் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து பாண்டியாவை ரன் அவுட் செய்தார்.

இதையடுத்து கடைசி 5 பந்தில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராகுல் டெவாட்டியா களத்திற்கு வந்தார். 2வது பந்தில் ராகுல் டெவாட்டியா ஒரு ரன் அடிக்க, 3வது பந்தில் பவுண்டரி அடித்த மில்லர், 4வது பந்தில் ரன்னே கொடுக்காமல் தடுத்திருக்கலாம். டேவிட் மில்லர் அடித்த பந்தை பவுலர் ஒடீன் ஸ்மித்தே பிடித்தார். டெவாட்டியா ரன் ஓட முயற்சித்ததால், அவரை ரன் அவுட் செய்யும் நோக்கில் பந்தை ஸ்டம்ப்பை நோக்கி த்ரோ அடித்தார் ஒடீன் ஸ்மித். ஆனால் அது ஸ்டம்ப்பில் படாமல் சென்றதால், ஓவர்த்ரோவில் ஒரு ரன் கிடைத்தது. இதையடுத்து பேட்டிங் முனைக்கு சென்ற ராகுல் டெவாட்டியா, கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி 2 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி குஜராத் டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற செய்தார்.

ஒருவேளை ஒடீன் ஸ்மித் அந்த ஓவர்த்ரோவில் சிங்கிள் கொடுக்காமல் இருந்திருந்தால், டேவிட் மில்லர் பேட்டிங் முனையில் இருந்திருப்பார். அவர் கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர்கள் அடித்திருப்பாரா என்றால் கண்டிப்பாக சந்தேகம் தான். ஒருவேளை 2 சிக்ஸர்கள் அடித்திருந்தாலும், அந்த சிங்கிள் கொடுக்காத பட்சத்தில் ஆட்டம் டை தான் ஆகியிருக்கும். எனவே அந்த ஒரு தவறுதான் ராகுல் டெவாட்டியா பேட்டிங் முனைக்கு செல்வதற்கும், பஞ்சாப் அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

அதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட வீரேந்திர சேவாக், லார்ட் திவேத்தியா, ஸ்மித்தின் செயல் மூளை மழுங்கிய செயல். கடைசி 2 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டிருக்கும். ஸ்மித் ஓவர்த்ரோ மூலம் ஒரு ரன் வழங்கியதுதான் தோல்விக்கு காரணம் என்று சேவாக் கூறியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக டுவீட் செய்த வாசிம் ஜாஃபர், 4ஆவது பந்தில் ஒடீன் அடித்த ஓவர்த்ரோ தான் திருப்புமுனை. அது ஒரு கூடுதல் ரன்னை வழங்கியதுடன், டெவாட்டியா பேட்டிங் முனைக்கு வர காரணமாக இருந்தது. அதுமட்டுமல்லாது ஒடீன் ஸ்மித் கடைசி ஓவரில் ஒரு யார்க்கர் கூட வீசவில்லை என்று வாசிம் ஜாஃபர் விமர்சித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News